நாசா விஞ்ஞானியான ஜெயம் ரவி விவசாயத்தைக் காக்க ஏர்கலப்பையைத் தூக்கினால் என்னவாகும் என்பதே பூமி. ஜெயம்ரவியின் 25-வது படமாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. விவசாயத்தைக் காப்பாற்றியதா பூமி என்பதை பார்க்கலாம்?
பெரிய ஸ்டார் நடிகர்களுடைய 25வது, 50வது படங்களை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என விரும்புவார்கள். அதற்கு ஏற்ற போல் கமர்ஷியல் மசாலாவாகப் படங்கள் இருக்க வேண்டும் என பெரிதும் விரும்புவார்கள். குறிப்பாக திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என எதிர் பார்ப்பார்கள். இந்த இரண்டுமே பூமி படத்துக்கு கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ஜெயம்ரவி எப்போதும் போல நன்றாகவே நடித்திருக்கிறார் இந்த பூமியில். அதே சமயம், படம் முழுக்க ஜெயம்ரவி மட்டுமே நடித்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. எல்லோரும் ஒன்று சேர்ந்து விவசாயத்தைக் காப்போம் என்கிறார் பூமி. குறைந்த பட்சம் கதையின் நாயகி நிதி அகர்வாலுக்காவது சில வசனங்கள் பேசக் கொடுத்திருக்கலாம். வழக்கமான சினிமா ஹீரோயினாக வந்துபோகிறார் நிதி. படத்தில் காமெடியன் சதிஷ் மற்றும் சரண்யா இருவரும் ஒரு ஓரமாக இருக்கிறார்.
கடன் தொல்லையினால் கஷ்டப்படும் விவசாயி தற்கொலை செய்துகொள்வது என்னும் நிஜப் பிரச்சினையைப் பேசி படம் துவங்கினாலும் கூட, அதன்பிறகு படம் எங்கெங்கோ பயணமாகிறது. அடுத்த ஒரு மாதத்தில் செவ்வாய் கிரகத்துக்குக் கிளம்பப் போகும் விஞ்ஞானியை, இப்படி ஒரு மாதம் விடுமுறை கொடுத்து ஊருக்கு அனுப்புவார்களா என்று தெரியவில்லை.
முதலில் நாட்டு விதைகளைத் தேடிச் செல்கிறார் பூமி (எ) ஜெயம்ரவி. விவசாயம் செய்கிறார். எல்லா விவசாயிகளையும் இயற்கை வழி விவசாயம் செய்யச் சொல்கிறார் பூமி. நமக்கு நாமே என நாமே ஒரு கார்ப்பரேட் கம்பெனியை துவங்கலாம் என்கிறார் பூமி. கெட்ட கார்ப்பரேட்டுக்கு எதிரான நல்ல கார்ப்பரேட் என்று கூறுகிறார். கடைசியாக என்ன சொல்ல வந்தார் என்று தான் தெரியவில்லை. அதோடு படமும் முடிந்துவிட்டது.
விவசாயத்தைக் காக்க வேண்டும், கார்ப்பரேட்டை அழிக்க வேண்டும் என இரண்டு பெரிய விஷயங்களைப் பேசுகிறது இந்த படம்.ஆனால், இரண்டு சப்ஜெட்டுகளுமே மிகப்பெரிய ஏரியா என்பது கவனிக்க தக்கது. இரண்டையும் சேர்த்து ஒரே திரைகதைக்குள் அடக்குவதில் பெரிதும் சிரமம் இருப்பது திரைக்கதையில் தெளிவாக தெரிகிறது. அமைச்சர், கலெக்டர், வட்டாச்சியர், போலீஸ் என முதல் பாதியிலேயே ஒரு மாத்திரையைக் கொடுத்து ஈஸியாக டீல் செய்துவிடுகிறார் பூமி. அதன்பிறகு, அவர்களைக் காணவில்லை, ஏன் என்றும் தெரியவில்லை.
ஒட்டுமொத்த கார்ப்பரேட்டுகளுக்கான ஒற்றை முகமாக வரும் வில்லனின் கேரக்டர் எப்படி இருக்க வேண்டும். சாதாரண கூலிப்படையை போல் சும்மா, குடித்துக் கொண்டு போனில் ஹீரோவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீதிமன்றத்துக்கு வந்து திமிறு காட்டுகிறார் வில்லன், அமைச்சரைக் கொலைசெய்ய வருகிறார் என அடியாள் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் செய்கிறார்.
படம் துவங்கிய முதல் 15 நிமிடங்களிலேயே இரண்டு பாடல்களுடன், அதோடு விவசாயப் பிரச்சனைகளை பேசும் இடமெல்லாம் பின்னணியில் பாடல்கள், அவ்வப்போது சில அட்வைஸ் மழைகள் என அனைத்தும் சேர்த்து நிறைகிறது படம்.
படத்தின் வில்லனாக ரோனித் ராய் நடித்துள்ளார். பல தமிழ்ப் படங்களில் இதற்கு முன்பு பார்த்த அதே கார்ப்பரேட் வில்லனாக தான் வருகிறார். ஆனால், நடிப்பில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று பெரிய கதையை எடுத்துள்ளார் இயக்குனர் லட்சுமண். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையை இப்படம் பேசியுள்ளது. விவசாயத்தின் சிறப்பு மற்றும் அதற்கு எதிரான சதி என்று படத்தில் பேசும் வசனங்கள் சிறப்பு.
இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளது. குறிப்பாக தமிழன் என்று சொல்லடா பாடலும் அதை உருவாக்கிய விதமும் சிறப்பு. பின்னணியில் கவனிக்க வைத்திருக்கிறார் இமான். டுட்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பெரிய பலம்.
மொத்தத்தில் பூமி செழிப்புடன் உள்ளது.