திட்டம் இரண்டு – காணாமல் போன தனது தோழியைக் கண்டுபிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் எடுக்கும் முயற்சிகள் தான் இந்த ‘திட்டம் இரண்டு’ படத்தின் கதை.
சென்னைக்குப் புதிதாக வருகிறார் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பொழுது பேருந்தில் சுபாஷ் செல்வமைச் சந்திக்கின்றார். இருவருக்கும் இடையில் நட்பு மலர்கிறது. சென்னை வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைக்கும் முதல் வழக்கே, மர்மமான முறையில் காணாமல் போன அவரது நீண்ட கால நெருங்கிய தோழியான அனன்யாவைத் தேடுவதுதான். அவரைத் தேடுகின்ற பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிந்துகொள்கின்ற அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் என்ன, அனன்யா உயிரோடு உள்ளாரா, இல்லையா, என்பதுதான் ‘திட்டம் இரண்டு’ படத்தின் மீதி திரைக்கதை.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகவே செய்திருந்தார். அவருடைய நடிப்பு மற்றும் மேக்கப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக சுபாஷ் செல்வம். அவருடைய நடிப்பு ஒரு சில இடங்களில் சரியாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் கூட ஒரு நம்பிக்கைக்குரிய அறிமுகம் என கூறலாம்.
இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அனன்யா நடித்துள்ளார். மொத்தப் படத்திலே இவரது நடிப்பு மட்டும் தான் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதால் இவர் மட்டும் மற்றவர்களை விட தனியாகத் தெரிகிறார். இப்படித்தான் இந்தக் கதாபாத்திரம் என்றாலும் கூட, இப்படி மட்டுமேதான் நடிக்க வேண்டுமா என்று தோன்றியுள்ளது. பாவல் நவகீதன் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்கள் கதையை நகர்த்த கொஞ்சம் உதவியுள்ளன.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் படத்துக்கு மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். ஆனால், அனைத்து இடங்களும் மற்றும் அனைத்துக் காட்சிகளுமே ஒரு ஸ்டுடியோ லைட்டிங் செட்டப் மாதிரி இருக்க வேண்டும் என ஏன் முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. சதீஷ் ரகுநாதனின் பின்னணி இசை எமோஷன் காட்சிகளை ஹைலைட் பண்ணுவது போல இருந்தாலும் கூட படத்துக்குப் பொருந்தியுள்ளது.
முதல் காட்சிகளில் இருந்து கதைக்குள் போனதற்கே இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கைப் பாராட்டலாம். அடுத்தது, வழக்கமாக ஒரு பெண் காவல்துறை அதிகாரி யோசித்தால் உடனே அவருக்கு என்று ஒரு மாஸ் பில்டப், மற்றும் ஸ்லோ மோஷனில் திரும்புவது என்று பல விஷயங்கள் இல்லாமல் அவரை ஒரு பொறுப்பான காவல்துறை அதிகாரியாகவே காட்டியது மிகசிறப்பு.
படத்தின் துவக்கம், அப்புறம் துப்பறிவது தொடங்கிய விதம், அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிந்துகொள்ளும் விஷயங்கள் என்று படிப்படியாக, தெளிவாகக் கதை நகர்ந்துள்ளது. ஆனால், பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் ஒரு திருப்பம் கொடுப்போம் என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அதைச் செய்துள்ளார் இயக்குனர். ஒரு கட்டத்துக்கு மேல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியே இல்லை என்று சொல்லியிருந்தாலும் கூட நாம் நம்பியிருக்க வேண்டும் என்று தோன்றும். அவர் நினைக்கும் விஷயங்களையும், இன்னும் சில விஷயங்களையும் பல இடங்களில் வசனங்களாக வைத்திருப்பதைத் தவிர்த்திருந்தால் சிறப்பு.
படத்தின் மிக முக்கியமான ஹைலைட்டே க்ளைமாக்ஸ் காட்சி தான். யார், எங்கே, ஏன், எப்படி என்று காட்சிகளை நிஜமாகவே ஊகிக்க முடியாத அளவிற்கு வைத்ததன் மூலம் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்கவில்லை என்றாலும் கூட, ஒரு பவுண்டரி அடித்துள்ளார் படத்தின் இயக்குநர். ஆனால், அந்தக் காட்சிக்காக எழுதப்பட்டுள்ள முன் கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் ட்ரெய்லரில் இருந்த த்ரில்லர், படத்தில் ஒரு சில கட்டத்துக்கு மேல் காணாமல் போய்விட்டது.
மொத்தத்தில் இந்த ‘திட்டம் இரண்டு’ படமானது நமது இரண்டு மணி நேரத்தை ரொம்பவும் வீணடிக்காத, பெரிதாக போரடிக்காத வகையில் ஒரு படம். க்ளைமாக்ஸ் காட்சியில் உள்ள ஒரு ட்விஸ்ட், இந்தக் கதை பேச முயற்சி செய்துள்ள ஒரு முக்கியமான விஷயம் ஆகியவற்றுக்காக இந்தப் படத்தைப் பாராட்ட வைத்துள்ளது. இதைச் சொல்வதற்கான திரைக்கதையில் இன்னும் கூட கொஞ்சம் அழுத்தம் மற்றும் நம்பகத்தன்மை என்று கவனம் செலுத்தியிருந்தால் ‘திட்டம் இரண்டு’ கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லியிருக்கலாம்.
Full Movie Download : Thittam Irandu